100-ஆவது இதழ்காணும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கப்பூர் தமிழ் மற்றும் தமிழர்களின் தனித்த அடையாளமாகச் சிறப்புடன் வெளிவந்துகொண்டிருக்கும் பெருமைக்குரிய ஓர் இலக்கிய ஊடகம். இலக்கியம், சமூகம், மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த தளங்களில் ஒவ்வொரு இதழ்களிலும் இதன் திறனாளர்களான ஆசிரியர் குழுவினர் கொண்டுசேர்த்துவரும் படைப்புக்களின் தகுதியும் கருத்தாழமும் தி சிராங்கூன் டைம்ஸை ஓர் உலகத்தரம் வாய்ந்த தமிழ் இதழாகக் கொண்டுநிறுத்தக்காண்கிறோம். இதழ்களில் பங்கேற்கும் ஒவ்வொரும் படைப்பாளர்களும் கல்வி, இலக்கியம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுப் பின்புலங்கள் சார்ந்தவர்களாக தொழில்முறை எழுத்தாளர்களிலிருந்து முதன்முறை எழுதத்தொடங்குபவர்களென்று பலதரப்பட்ட படைப்பாளர்கள் பங்கேற்கும் தாவளமாக ஒவ்வொரு இதழும் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்துத் தரப்படும் நேர்த்தி பாராட்டுதலுக்குரியது. ‘தி சிராங்கூன் டைம்ஸின்’ நூறு இதழ்களுமே ஒருவகையில் சிங்கப்பூர் மற்றும் இந்த வட்டாரம் சார்ந்த சமூகம், இலக்கியம், வாழ்வியல் மற்றும் வரலாறு ஆகிவை சார்ந்த செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஓர் அரிய ஆவணத் திரட்டு என்றே காணமுடிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி.