வாழ்வின் பேரோசைக்கும் பேரொளிக்கும் முன் நாம் மிகச்சாதாரணமானவர்கள் அல்லவா? எதையுமே செய்யமுடியாமல் கண்முன்னே கடந்துபோகும் துயர்தருணங்களை மௌனத்தால் நின்று தீர்ப்பதை விட ஒரு எளிமையான கவிஞனோ மனிதனோ என்ன செய்துவிட முடியும்? காலமே, கணத்தின் கருணைக்கடலே, இதோ, இந்தச் சிறுஅலையை, புயலை, துயரை, என்னிடமிருந்து உனதாக்கிக்கொள், என் சார்பாக அவற்றைத்தின்று செமித்துக்கொள், ஒரு நிழற்படமாய் எடுத்துக்கொண்டு ஓடு. என்னை விட்டுவிட்டு. நான் காலஎறும்புகள் இழுத்துச்செல்லும் சிறு புழு. உன்னுடைய கர்ப்பக்கடலலைக்குள் சிறுசொல்லாய் நீந்திக்கொண்டிருக்கும் சிறுசேய் என்று உதயா என்ற காலத்தின் தேவனிடம் முறைமை செய்யும் தளமாகவும் விரியும் இக்கவிதைகளின்வெளி தொடர்எண்ணங்களில் சிந்தனைகளில் சிலிர்ப்பைத் தருகின்றன.