மொழிபெயர்ப்புக் கவிதை

0
433

மூலம்: Thadavukaari (மலையாளம்)

மஹேஷ்

நெற்றியிலிருந்து நீ துடைத்தெறிந்த வியர்வைத்துளிகள்
என் சேலையின் கரைகளில்
கறைகளாய்ப் படிந்தன.
உன் பாதிமூடிய விழிகளில்
என் இழப்புகளின் கதைகளைப் படித்தேன்.
எவரையும் உறுத்தாத உன் நடத்தையால்
என் பலவீனங்களுக்கு அடையாளம் கிடைத்ததை நான் அறிந்தேன்.
உன் வண்ண வண்ணக் கனவுகளில்
என் நித்திரைகள் நரைகூடின.
உன் குறுநகையில் என் கண்ணீர் உறைந்ததும்
உன் உணர்ச்சியின்மையில் நான் தளர்ந்ததும்
என் தன்னுணர்வறிய நிகழ்ந்தவையே.
எனக்கு விடுபடவேண்டுமாயிருந்தது.
ஆனால்….
நான் கைதியாயிருந்தேன்
என் நினைவுகளுடன்
.

கவிஞர் பற்றிய குறிப்பு

கே.எஸ். நந்திதா

கேரளத்தில் வயநாடு பகுதியில் 1969இல் பிறந்த நந்திதா, தனது 29ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் மலையாள இலக்கிய விமர்சகர் பஷீரின் முன்னெடுப்பில் அவரது கவிதைகள் பதிப்பிக்கப்பட்டு வெளியுலகுக்கு வந்தன. காதலும் மரணமும் கருப்பொருட்களாகத் தொடரும் அவரது செறிவான கவிதைகள் மலையாளக் கவிதை உலகில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளன.