இலக்கியத் தடாகம்

அறிமுகம் வெளியிட விரும்புவோர் அச்சில் வெளியான நூல்களின் (கவிதை, புனைவு, படைப்பூக்க அபுனைவு) நூல்குறிப்பை
(30 சொற்களுக்கு மிகாமல்) பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பாளர் விவரம், நூலின் முன்னட்டைப்படம், சிங்கப்பூரில் கிடைக்குமிடம், தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]

வேர்களைத் தழுவும் விழுதுகள்
(யூசுப் ராவுத்தர் ரஜீத் /
தமிழ் அலை வெளியீடு / 2023 / நூலைப் பெற: ஆசிரியர் யூசுப் ரஜீத் 90016400)

தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த ஆறாவது தலைமுறை இளைஞன் ஒருவன் உலகநாடுகளைச் சுற்றும் சொல்லிசைக் கலைஞனாக ஆன வரலாறு. எண்ணிலடங்கா நுட்பங்களும் பிரம்மாண்டங்களும் எறும்பிலும் உண்டு. இது ஆசிரியரின் அனுபவ வரலாறு.

சம்செங் (பொன் சுந்தரராசு /
ஜிவஜோதி அச்சக வெளியீடு / 2023 /
நூலைப் பெற:
ஆசிரியர் பொன் சுந்தரராசு 90681094)

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய சிங்கப்பூர்க் களத்தில் அமைந்துள்ள நாவல். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஜூச்சியாட் பகுதி கூட்டுக்குடியிருப்பில் வசித்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அக்கால மொழி, அரசியல், சமூகச் சூழல்களையும் 46 அத்தியாயங்களில் படம் பிடித்துக்காட்டும் படைப்பு.

அலை அலையாய் –
கவிமாலைக் கவிதைகள் 2021-2022
(தொகுப்பு: மா. அன்பழகன் /
கவிமாலை வெளியீடு / 2023 /
நூலைப் பெற: இன்பா 91461400)

பல்வேறு கவிமாலைக் கவிஞர்களால் எழுதப்பட்ட மரபு, மரபுசாராக் கவிதைகள். வடிவத்தில், புத்தாக்கத்தில், மொழிப் பயன்பாட்டில், பாடுபொருளில், சிந்தனையில் வேறுபடும் முயற்சிகள் வெளிப்பட்டுள்ள தொகுப்பு. இது கவிமாலை வெளியிடும் 13ஆம் தொகுப்பு.

முகிழ் (மலையரசி சீனிவாசன் /
ஆம்பல் பதிப்பக வெளியீடு / 2023 /
நூலைப் பெற: மலையரசி 97826039)

சிங்கப்பூர்ச் சூழலில் அமையும் 13 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பின் கதைகள் புலம்பெயர் தொழிலாளர் வாழ்வு, தலைமுறை இடைவெளி, சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமகால அம்சங்களைப் பேசுகின்றன. ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

கலர் பென்சில் (மலையரசி சீனிவாசன் / ஆம்பல் பதிப்பக வெளியீடு / 2023 /
நூலைப் பெற: மலையரசி 97826039)

‘கதைக்களம்’ மாதாந்திர நிகழ்வில் கடந்த பத்தாண்டுகளில் ஆசிரியரால் படைக்கப்பட்டக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நான்கு பக்க அளவுக்கு மிகாமல் அமைந்துள்ள இக்கதைகளில் பல்வேறு கருப்பொருள்கள் கையாளப்பட்டுள்ளன.

கரிப்புத்துளிகள் (அ. பாண்டியன் / யாவரும் பதிப்பக வெளியீடு / 2023 /
நூலைப் பெற: பிரேமா மகாலிங்கம் 91696996)

பினாங்கையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் களமாகக் கொண்ட நாவல். பாலத்தின் கட்டுமானம் அப்பகுதியில் கொணரும் மாற்றங்களை ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் கொண்டுவரும் மாற்றங்களுக்கான ஒரு குவிமையமாகப் பயன்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ள புனைவு. வரலாற்றையும் வாழ்க்கையையும் உரையாடலுக்கு உள்ளாக்கும் முயற்சி.

தாரா (ம. நவீன் /
யாவரும் பதிப்பக வெளியீடு / 2023 /
நூலைப் பெற: பிரேமா மகாலிங்கம் 91696996)

அறமற்ற தலைமைத்துவம், சாதியப்பற்று, தாழ்வுணர்ச்சி, தீரா இச்சை, அதிகார வேட்கை போன்ற மானுடச் சிக்கல்களையும் இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சனைகளையும் பின்னணியாகக் கொண்ட மலேசிய நாவல். யதார்த்த வாழ்க்கையோடு மிகுபுனைவும் கலந்த நாவல்.