ஆழிப்பெருக்கு

சிறுகதைத் தொகுப்பு – மணிமாலா மதியழகன்
மணிமாலா மதியழகன் அவர்களின் சிறுகதைகளைப் படிக்கிறபோது அவற்றின் சரளத் தன்மையும் நுண்ணிய குறிப்புகளும் நாவல் எழுதும் தன்மையோடு வெகுவாக ஒத்து வருவதை அறிந்திருக்கிறேன். அவர் ஏன் நாவல் எழுதவில்லை என்று கேட்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதிவிட்டார். இதன் பின்னாலும் அவர் நாவல் தளத்திற்கு வந்து சேர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசையை மீண்டும் ஒருமுறை இந்த தொகுப்பை படிக்கிற போது நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாவல் வடிவம் அவருக்கு இலகுவாக வரும். அந்த வகையில் நாவல் அனுபவங்களையே பலவற்றை இவற்றில் கூட சிறுகதைகளாகக் கொண்டு வந்திருக்கிறார். நாவல் பற்றி எந்த பயமும் கொள்ளாமல் அந்த வடிவத்தை அவர் மேற்கொண்டு விரிவான களத்தில் சிங்கப்பூர் மக்களைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
வழக்கமான அவருடைய சிறுகதைகளில் தென்படும் களன்கள் வித்தியாசமானவை. சிங்கப்பூர்த் தமிழர்கள் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்தவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பவை. அப்படிப்பட்ட கூர்ந்த கவனிப்பில் இந்த கதைகளும் உருவாகியுள்ளன.
இதில் உள்ள பெண்கள் பற்றிய சித்திரங்கள் மிகுந்த நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றவர்களுடைய நலத்தை எண்ணி தவிக்கும் மூன்றாம் மனுசி அதிசயப்படுகிறார். அப்படி நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அம்மாவிடம் கிடைக்காத நட்பை எதேச்சையாகப் பழகும் பெண்மணியிடம் எதிர்பார்க்கும் இன்னொரு இளம் பெண்ணை பார்க்கிறோம்.

கொரோனா சூழல் பல கதைகளைத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறது. தனிமையில் இருப்பவன் கோவிட் சூழலில் அறைக்குள் இன்னும் மூழ்குகிறார்.
இன்னொருவர் : குடும்ப வாழ்க்கை இருக்கிறது. பக்கத்து நாட்டில் கணவன் வாழ்கிறார். அவ்வப்போது வந்து பார்க்கிறார். வளர்ந்த குழந்தைகள் அப்பாவின் இருப்பைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். ஆனால் கோவிட் சூழலில் அவருக்கு என்ன ஆகிறது? அவர் காட்டுப்பகுதியில் வசிக்கிறாராம். காரணம் என்ன? அவருடைய வருமானம் என்ன ஆகிறது? அதிலிருந்து இந்த குடும்பத்திற்கு எப்படி அனுப்புகிறார் என்று கேள்விகள் இதனுடைய கதையின் மூலமாக வெளிப்படுகிறது,
வாழ்க்கையின் பதற்றம் பல விசயங்களைக் கொண்டு வரும். இயல்பான சூழலை கெடுத்து விடும். அந்த வகையில் பதற்றப்படுகிறார்கள் மனிதர்கள். பதற்றப்படுதலைப் பற்றி பல கதைகள் எழுதி இருக்கிறார். திறன் என்ற கதையில் பதற்றம் காரணமாக தன்னை சுற்றி உள்ள சூழல் கெடுவதை பற்றிய விவரிப்பு சிறப்பாக இருக்கிறது.
பிரிவுகள் மனிதனுக்கு மட்டும்தானா? பிராணிகள் விலங்குகளுக்கும் கூட இந்த பிரிவுகள் பாதிக்கக் கூடியது இந்த பிரிவுகள் தரும் சங்கடங்கள் பல கதைகளில் பதிவாகி இருக்கின்றன. கிளியின் பிரிவு கூட.
துணை என்ற கதையில் மருத்துவமனையில் இருப்பவன், தனக்கு துணையாக இருப்பவன் இல்லாமல் போவது பற்றிய அக்கறை இருக்கிறது. மகனின் விசித்திர நடவடிக்கை. அவன் காணவில்லை என்ற பதைபதைப்பு பெற்றோருக்கு ஏற்பட்டு விடுகிறது.
தேடல் போன்ற கதைகளில் விசித்திர மனதின் பாதையின் பக்கம் காட்டப்படுகிறது. கதாநாயகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை கடைசி வரியில் சொல்லி கதையை வேறு ஒரு விதமான களத்துக்கு கொண்டு போகிறார்.
வதம் கதையில் நோய் தன்மை கொரோனா சூழலை முன்வைத்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. கொரனா வதம்தான்.
புடவை கடையில் புடவை தேடும் வெள்ளி விழா கண்ட மனைவி. ஆனால் அந்த கணவனுக்கு இருக்கிற இன்னொரு தொடர்பு இருப்பதை ஓரிரு வரியில் கதையினுடைய தளத்தையும் வேறு வகையில் முயற்சித்துக் கொண்டு செல்கிறது.
இந்த கதைகளின் மூலமாக மணிமாலா மதியழகன் பல மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்கள் விசித்திர இயல்புகளையும் விஸ்தாரமான போக்கைப் பற்றியும் பேசி சிங்கப்பூர் மனிதர்களுடைய வாழ்க்கையையும் கொண்டு வந்து விடுகிறார்.
பெருந்தீ
சிறுகதைத் தொகுப்பு – மணிமாலா மதியழகன்

சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி மணிமாலா மதியழகனின் சிறுகதை நூலான “பெருந்தீ” 2021ஆம் ஆண்டு வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் அவருடைய நான்காவது சிறுகதை தொகுப்பாகும். சிறுகதைகள் மட்டுமல்லாது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.
இந்நூலில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. பெரும்பாலான கதைகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள். இதில் அரசியல் கதைகளோ, அண்டை நாட்டுப் பிரச்சினைகளை பற்றிய கதைகளோ, அறிவியல் கதைகளோ, அறிவுரைக் கதைகளோ அல்லது காதல் கதைகளோ என்ற வகைப்பாட்டில் இல்லாமல் அத்தனையும் நம் அண்டை வீட்டுக் கதைகள், உறவினருக்கு நிகழ்ந்தது அல்லது கேள்வியுற்றது என்ற வகையில்தான் கதைகளை கட்டமைத்திருக்கிறார். ஆகையால் கதைக்களத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தெளிவான காட்சிகளை விரித்துக் காட்டியுள்ளார்.

கதைகளின் தலைப்பு, கதாப்பாத்திரங்களின் பெயர்கள், காட்சியமைப்பு இப்படி எல்லாமே கதையோடு தொடர்புடையதாகவே அமைந்திருப்பது வாசிப்பில் ஒரு முழுமையைக் கொடுக்கிறது. கொட்டிக் கிடக்கும் வருணனைகள் தீவிரமாக சிந்திக்க வைக்காமல் முதல் சந்திப்பிலேயே பதிந்துவிடும் முகத்தைப்போல மனத்தில் தைக்கின்றன. இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் முதல் பக்கத்திலேயே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் அலங்காரப் பூக்கள் எதுவுமின்றி என்று குறிப்பிட்டிருப்பார்போல.
இதிலுள்ள கதைகளின் ஒற்றுமை என்னவெனில், எல்லாக் கதைகளுமே கடலூரையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்திருப்பது. அது மட்டுமில்லாமல் ஒரு கதையின் கதை மாந்தர்கள் யாரேனும் ஒருவர், சிங்கப்பூரில் வாழ்வது. ஆக கடலூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒரு பாலத்தை எழுப்பியுள்ளார்.
கொரோனா காலத்தைக் கடந்து பெருந்தீ வெளியீடு கண்டிருப்பதால் கொரோனா எனும் பெருந்தொற்றை சமாளித்து வெற்றி கண்டிருக்கிறது.ஆகையால் நோயின் தாக்கம் பெரும்பான்மையான கதைகளில் தெரிகிறது.
முதல் கதையைப் படிக்கத் தொடங்கும்போது தட்டுத் தடுமாறி கடலூரின் வட்டார மொழியை உச்சரிக்கத் தொடங்குபவர்கள் மூன்றாவது நான்காவது கதைக்குள் நுழையும்போது அங்கேயே வாழ்பவர்போல அதனோடு ஒன்றிவிடக்கூடும். அங்கு வாழும் அம்மா, பாட்டி சொல்லும் பழமொழிகளையும் காதில் போட்டுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் வேலை பார்த்த கணவர் இறந்த பிறகு கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாக இருந்த இரண்டு பெண் குழந்தைகளை ஒரு தனி மனுஷியாக நின்று எப்படி கரை சேர்கிறாள் அந்த பூங்காவனம் என்று ‘பூங்காவனம்’ என்ற கதையிலும், குடிகாரக் கணவனிடமிருந்து தன்னையும் தன் மகளையும் காப்பாற்றிக்கொள்ளும் ஓர் அம்மாவின் நிலையைப் பேசும் கதையான ‘வெக்காளம்’, இதுபோன்ற இன்னும் பல கதைகளில் குடும்பப் பெண்களின் அவல நிலைகளை ஆங்காங்கே காட்சிப்படுத்தியுள்ளார். ’நாலெழுத்து அறியாதவ’ கதையை கதை சொல்லி பவாசெல்லத்துரை தன் கதையாடலில் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் எளிய வகையில் மனிதனின் அக உணர்வுகளை அப்பட்டமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பு. கடலூரின் மண்வாசத்தை நுகர நீங்களும் வாசிக்கலாம்
நீர்வழிப்படூஉம்
நாவல் – தேவி பாரதி

நீர்வழிப்படூஉம் என்ற தலைப்பே வித்தியாசமானதாக இருந்தது. அதனாலயே அக்கதையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. எழுத்தாளர் திரு.தேவிபாரதி அவர்கள் வெள்ளகோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களையும், அதன் புழுதிப்பாதைகளின் வழியாகவும், ஒற்றையடிப்பாதைகளின் வழியாக பல கிராமங்களை சுற்றிக்காட்டியுள்ளார். கதையின் ஆரம்பமே ஒரு சிறுவன் கதைசொல்வதைப்போல அமைந்துள்ளது. அதனால் கதையை வாசிக்கும் வாசகனுக்கு ஒரு சிறுவனின் பார்வையிலிருந்தே கதை புரிய ஆரம்பிக்கின்றது. இது ஒரு வித்தியாசமான கதைசொல்லும் உத்திமுறையாக இருந்தது. கதை முழுக்க நாமும் சிறுவனின் மனநிலையில் இருந்தே கதையை பார்கிறோம். சிறுவன் முறைப் பெண்ணைப் பார்த்து வெட்கப்படும் போது வாசகர்களும் சிறுவன் சிறுமியைப்போலவே வெட்கப்பட்டுக்கொள்வார்கள்.
கிராமங்களில் பிரசவத்திற்கு வரும் மருத்துவச்சியின் பங்கும், மருத்துவச்சியை நடத்தும் விதமும் அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன்பும் பின்பும் அவர்களின் கவனிப்பும் நிதர்சனமாக இருக்கிறது. தான் பிரசவம் பார்த்த குழந்தைகள் இறக்கும்போது அவள் படும் பாடு யாரும் அறியாதது. சோகத்தை மறைக்க மருத்துவச்சி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவது, வாசிப்பவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தும். பல நல்லத்தங்காள் கதை, அண்ணன்மார் கதை போன்ற சொலவடைக் கதைகள் அவற்றிற்கான பதிவுகளை இன்றும் நம்மால் பார்க்க முடியும். கோவிலாக மற்றும் வாய்மொழிக்கதைகளாக தான் எழுதியக் கதைகளின் வழியே இணைத்துக்காட்டி, அவர்களின் வாழ்வியலோடு ஒத்துக்காட்டியுள்ளதும், அருமை. பண்ணையக்கார்களின் வாழ்வில் நாவிதர்களின் பங்கு சாதாரணமானதல்ல; அவர்களின் பங்கு வாழ்விலும், சாவிலும் எப்படிப்பட்டது என்பதைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
மேலும் நகரத்திலோ அல்லது பெரிய கிராமங்களிலும் வசிப்பர்களுக்கு குப்பையள்ளுபவர், செருப்புத்தைப்பவர்கள், நாவிதர்களின் பங்கு வெறும் வேலை மட்டும்தான். ஆனால் கிராமங்களில் அவர்களின் தேவை அனைத்திற்குமானது என்பது நகரத்தில் இருந்து வாசிப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். தினசரி வாழ்வுகளில் வாழ்வதற்காக மரணத்தின் எல்லைக்கே போய்வரும் சாமானியர்கள் கதை. அதில் அண்ணன் தங்கைகளை அரவணைத்துச் சென்ற முந்தையத் தலைமுறை அண்ணன் தங்கை. மேலும் அந்தக்கால வாழ்வியலில் சினிமாவின் பங்கு என்பதையும் கோடிட்டுக்காட்டியுள்ளார். வறுமை சிறுவர் சிறுமிகளையும் எப்படி துரத்தித் துரத்தி வாட்டி எடுத்தது என்பதை சாயப்பட்டறையில் வேலைசெய்யும் பிஞ்சுகளின் கைவண்ணத்தில் காட்டியிருந்தார். காரு மாமாவிற்கு எப்படியாவது ஒரு தீர்வு அல்லது ஒரு மருந்து கிடைத்துவிடாதா என்ற வாசகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் காரு மாவுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய்க்கு தீர்வே இல்லாமல் கண்ணீர் கதையாக முடித்திருந்தார்.
கொங்கு மொழியில் முழுக்கதையும் அமைந்துள்ளது. அவ்வாறில்லாமல் சாதாரண அனைவருக்கும் பொதுவான நடையில் இக்கதை இருக்குமானால் கண்டிப்பாக ஒரு சாதாரண நாவலாக இருந்திருக்கக்கூடும். கொங்குத் தமிழ் தெரியாதவர்களால் கதையை முதல் வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாது. அக்கா தங்கை உறவுகளை சகோதரனோடு வைத்துப் பேசுவது, பிறந்த வீட்டு சொத்துகளை ஏமாற்றுவதில் அவர்களின் மனைவிகளின் கருத்து அவற்றை சட்டங்களால் என்றுமே சரிப்படுத்த முடிவதில்லை என்பதையும் அதைத் தொடர்ந்து வரும் சண்டைகளும் அவர்களின் சாடைப்பேச்சுகளும் கதையை வாசிக்கும் வாசகர்கள், தங்களுக்கோ அல்லது எங்கேனும் கேள்விப்பட்ட கதைகளையோ ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளவர். ஒருவரை நேரடியாகப் பேசுவதை விட இந்த சாடைப்பேச்சுகள் மிகுந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணக்கூடியவை. ஆனால் கிராமங்களில் வம்பிழுக்கவும் சண்டைபோடவும் அதைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்துவர்.
தன்னுடைய அண்ணன் எவ்வளவு சிரமப்பட்டு தன்னைத் திருமணம் செய்து கொடுத்தார் என்று சொல்லும்போது தகப்பன் இல்லாத குடும்பத்தில் மூத்த பையன் சிறுவன் வயதில் தகப்பன் பொறுப்பை எடுத்துக்கொண்டு பிஞ்சுக்கைகள் படும் துயரை அழகாகக் காட்டியுள்ளார். கதாப்பாத்திர சிறுவனின் அம்மா இரண்டாந்தாரமாக திருமணம் முடிந்து சென்ற வீட்டில் அவள் படும் வேதனைகள், ஆசிரியரின் தாய் தன் மனைவியைக் கொடுமைப்படுத்துவது தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது முரண்பாடான ஒன்று. இதனை வாசிக்கும் வாசகர்களுக்கு அவர்களின் மனத்தில் ஆசிரியர் இவர் வீட்டில் தன் சொந்த மனைவிக்கே உதவி செய்யவில்லை; இவர் என்ன நல்லதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிடப்போகிறார் என்ற எண்ணம் தானக உருவாதற்கு வழியாக அமைந்துள்ளது.
கதாசிரியர் ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போது அதன் வளங்களையுத் சேர்ந்துச் சொல்லியிருப்பது அவர் கதைக்காக அந்த இடத்தைக் குறிப்பிடவில்லை என்பதை வாசகரால் உணர்ந்து கொள்ளமுடியும். கதாசிரியர் வெள்ளகோயிலைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் ஒவ்வொறு கிராமத்தினிலுள்ளும் சென்று வரமுடிந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.
சிகரி மார்க்கம்
ரியாஸ் அகமது

கைவிடப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை எப்படி நம் முன்னே கடலின் அசைவுகளாக அலைகழிக்கப்படுகிறது என்பதை சிகரி மார்க்கத்தில் நூலாசிரியர் ரியாஸ் அகமது நம்மிடம் காட்டுகிறார். நடுக்கடலில் கைவிடப்பட்ட கப்பலுக்குத் துணையாய் வானின் விண்மீன்களும் நிலவும் இறைவனின் அருட்கொடை என்ற முன் குறிப்போடுதான் நூல் ஆரம்பிக்கிறது. எல்லா துயரமான காலங்களிலும் மனித மனம் ஏந்தி நிற்கும் அன்பையும் கருணையையும் ரியாஸின் எழுத்துகளில் முழுமதியெனக் காணக் கிடைக்கும். முதல் சிறுகதைத் தொகுப்பான அத்தரில் கவர்ந்த எழுத்து, இந்த இரண்டாவது தொகுப்பான சிகரி மார்க்கத்தை உடனே வாசிக்கத் தூண்டியது.
“சிகரி மார்க்கம்” என்ற தலைப்பிற்கானப் பொருளாக, மனிதன் உயர்ந்த இறை நிலையை அடையக்கூடிய மார்க்கம்/வழி என்று எடுத்துக்கொள்ளலாம். ரியாஸ் தனது கதைகளின் வழியே துரோகத்திலும், துயரத்திலும் வீழ்ந்த மனிதர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தருகிறார். இக்கதைகளின் வழியே ஒரு புதிய வாழ்பனுவத்தை, பார்த்திடாத இஸ்லாமிய வாழ்வியலின் நேர்த்தியை நமக்குக் கடத்தி நமது அகத்தைத் தூய்மையாக்கும் வித்தையைச் செய்கிறார்.
முதல் கதையான “சிங்கா”வில் சர்க்கஸ் சிங்கம் காணாமல் போவது துவங்கி சிங்கப்பூரின் சிங்கம் தொடர்பானத் தொன்மத்தை அது தொட்டு நிற்கும் இடமாகட்டும், இறுதியில் அறைக்குள்ளிலிருந்து கேட்கப்படும் வினோதமான ஒலியாகட்டும், இவை இரண்டுக்கும் இடையே ஒரு வாழ்வியலை கண்முன்னே சில வரலாற்றுக் கீற்றுகளோடுச் சுட்டிக்காட்டுகிறார். சிங்காவில் மனித நம்பிக்கைகளை முன் வைக்கும் இடத்தில் சிங்கப்பூர் புனைவு வரலாற்றில் மிக முக்கிய பங்காக அது மாறுவதைப் பார்க்க முடிகிறது.
இரண்டாவது கதையான “சிகரி மார்க்கம்”, பிணைக்கைதிகளாகப் பிடிபட்ட உதிரிகளைப் பற்றிய கதை. எழுத்தாளர் உமா கதிர் எழுதிய ரோவல் தெரு மனிதர்களை நினைவூட்டியது இந்தக் கதை. மலேசியாவில் இருக்கும் உதிரிகளின் ஒரு துளி சிகரி மார்க்கம். இறுதியில் ரத்தத்துளிகளோடு வந்துவிழும் இரண்டு மோதிரங்கள் நிறைய கேள்விகளை நமக்குள் கிளர்த்துகின்றன. மனிதன் எவ்வளவு தூரம் சுயநலம் அற்றவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் அதன் முனைகள் இழுக்கப்படுகின்றன? எப்புள்ளியில் மனிதன் தன் இருப்பைத் தக்க வைக்கக் கீழே இறங்குகிறான் என்று இந்தக் கதை கடைசி சில வரிகளில் வேறு ஒரு கதையாக மாயம் செய்கிறது.

“மீரான் என்கிற மரியா” கதையானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே ஊடாடுகிறது. அந்தோனியார்புரம் புனித தஸ்னேவிஸ் மாதா ஆலயம் பின்புறம் மண்டியிட்டு பிராத்திக்கும் அமலி நம் மனக்கண்ணில் நீக்கமற நிறைகிறார். விசைப்படகுகளின் முதலாளிகளின் வாழ்வியல்தான் கதைக்களம். கடல் ஒரு படிமமாக நம்முள் விரிகிறது. செபாஸ்டியன் மற்றும் அமலிக்கு இடையேயான காதலைச் சொல்லும் இடமாகட்டும், பிள்ளையில்லாத குறையிலும் அவர்களின் அன்பான வாழ்வாகட்டும், காஹா – சேக்கும்மா – மீரான் இவர்களின் பாசப்பிணைப்பாகட்டும் ரியாஸ் காட்டியிருக்கும் உலகம் நகர வாழ்வில் நாம் அறிந்திராத ஒன்று. இக்கதை ஏனோ திரைக்காட்சிகளைப் போல மனதில் விரிகிறது. ஒரு நல்ல இயக்குனர் கையில் கிட்டினால், திரைப்படத்தில் இதில் வரும் காட்சிகளைக் காண முடியும் எனவும் தோன்றியது. மீரான் மரியாவாக மாறும் இடத்தில் அசலுக்கும் நகலுக்குமான போட்டியாக மாறுகிறது. அதை அப்படியே நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கிற மாதிரியும் இருக்கிறது.
அமலிக்கு மட்டுமே தெரியும் கருப்பு உருவம் புனைவின் அழகியலை நமக்குள் அப்படியே கடத்துகிறது. இந்தக் கதை நாவலாக விரித்து எழுதுவதற்கான எல்லா சாத்தியங்களையும் வைத்திருக்கிறது என்றே தோன்றியது.
உதாரணமாக, பின்வரும் பட்டியலில் இருப்பதை விரித்தால் ஒரு குறுநாவல் ஆகும் அளவிற்கான வீரியம் கூடியிருப்பதைப் பார்க்கலாம்.
- செபஸ்டியன் மற்றும் ஹாஜாவிற்கு இடையேயான பிணைப்பு
- சேக்கும்மா மற்றும் அமலிக்குமான நெடிய நட்பு
- செபாஸ்டியனுக்கும் அமலிக்குமான பிள்ளையற்ற காதல் வாழ்வு
- மீரான் உண்மையை அறிந்து கொண்டானா என்பதற்கான முடிச்சு.
“நகுதா” கதையில் ஹலிமா என்னதான் குழந்தையின்மையில் இருந்தாலும், அவளின் வாழ்வும் பேராசையும் நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது. புலம்பெயர்ந்த உதிரிகளின் வாழ்வு குறித்த சலனத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், சங்குவெட்டித் தெருவில் மரைக்கான் வீடு நோக்கி இரு நாணயங்களுடன் தீர்க்கமான நடையிடும் ஹலிமா நம் மனக்கண்ணில் என்றென்றும் ஒரு பெரும் செய்தியைத் தாங்கி நிறைகிறாள். நகுதா ஏங்கி ஏங்கி நிற்கும் வாழ்வு குறித்து நம் மனமும் அலைக்கழிகிறது.
“பெம்பலா” இத்தொகுப்பில் மிக முக்கியமானக் கதை எனக் கூறலாம். ஊருக்கே சேவகம் செய்யும் உறவற்ற உதிரியொருவனின் கதை. நிதர்சனம் எனும் புள்ளியில் பெம்பலாவின் இருப்பு எவ்விடம் என்பதை சிறுகதை பேசும் இடம் நம் மனதை என்னவோ செய்கிறது.
மீஸானை மீட்கும் காட்சியில் பெம்பலா இப்படிச் சொல்கிறார்.
பொடியா, அவ்வளவு சீக்கிரம் நீ ஆண்டவனிடம் போய்விட மாட்டாய். இன்னும் உனக்கு பூமியில் உண்ண சோத்து உருண்டைகள் மீதம் இருக்கிறது.
கதையில் பெம்பலாவின் உருவத்தை விவரிக்கும் இடம் மிக முக்கியமானது. அதுவரை பெம்பலாவின் ஆன்மாவை, மனதை மற்றவர் பார்வையில் கதை பேசிக்கொண்டே வரும். பின், பெம்பலாவின் மீது நம் பார்வை குவியும். அப்போது இப்படி எழுதுகிறார் ரியாஸ்.
உண்மையில் பெம்பலாவிடம் ஒரு புகைப்படம்கூட இருந்ததில்லை. தன்னுடைய தோற்றம் எப்படியிருக்கும் என்றுகூட அவன் கண்ணாடியில் பார்த்து வெகுநாளாகிவிட்டது. அவனது முகம் மஞ்சள் பூத்திருந்தது. சுருள் வளையங்களாக வளர்ந்திருந்த தாடியில் வெள்ளை நரை பூத்திருந்தது. பெம்பலா சுருட்டை மீண்டும் உள்ளிழுத்துக்கொண்டே தன் சட்டை கைமடிப்பில் தீப்பெட்டி இருக்கிறதா என்று சோதித்துவிட்டு கடல் இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனது அடையாளங்களை சரித்துப்போட்ட அந்த பொல்லா இரவைச் சபித்துக்கொண்டே நடந்தான். அன்றைய இரவில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லை. அவனை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த முஸ்தபா மாமாவும் மோதினாரையும் விட்டு அவன் வெகுதூரம் நடந்துவந்திருந்தான்.
‘தந்தையை இழந்து, தாயையும் இழந்து, மந்தைகள் மேய்த்து, எத்தனை தொல்லைகள்…‘, தூரத்தில் ஒலிப்பெருக்கியில் நாகூர் அனிபா பாடிக்கொண்டிருந்தார்.
இந்தக் காட்சியில் மனம் திக்கற்று பெம்பலாவிடம் சரணடைகிறது. கைவிடப்பட்ட உதிரிகளின் வாழ்க்கையில் ஒளிக்கீற்றாக ஒரு புதிய நிலம் நோக்கி பயணிப்பான் என்ற நம்பிக்கையை, ஆறுதலை பெம்பலாவிற்கு வழங்குவதாக நமக்கும் வழங்குகிறார் நூலாசிரியர்.
“ஏழாவது வானத்தில் வீடு” கதையில், ஆதரவற்று நிற்போருக்கு அடைக்கலமாகும் கரங்களில் இறைவன் குடியிருப்பான் என்ற பொருளில் அமைந்திருக்கிறது. இலந்தை மர நிழலில் உம்மாவின் கைபிடித்து நிற்கும் சிறுவனையும் சேர்த்து அரவணைத்து ஆதரவுக்கரம் நீட்டும் பெத்தாம்மா நம்முன்னே ஒரு பெரும் கதாப்பாத்திரமாக நிற்கிறார். தனது இரு மகன்களைப் பறிகொடுத்து தனது சொந்த மகனைப்போல அந்தச் சிறுவனுக்கு பாசமூட்டிய பெத்தாம்மா, அவர் அனுப்பும் பிராத்தனைகள் கடல் கடந்து புறாக்களாக பெறா மகனைச் சுற்றிப் பறந்து கொண்டிருப்பதும் நம்மை பெத்தாம்மாவிடம் பிணைத்துக்கொள்ளும் மந்திர இடங்களாகிறது. அன்பும் கருணையும் வாஞ்சையும் நிறைந்த நிஜ மனிதர்களை தனது கதைகளில் ரியாஸ் படைப்பாக்கியிருக்கும் விதம் வெகு முக்கியமானது. இலந்தை மர நிழல் அரூபமாக கவியும் நொடியில் நம்முள் பெத்தாம்மா உயிர்பெறுகிறார்.
“மாலே பாஜூ” கதை இத்தொகுப்பில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. மிக ஆழமான கதைகளை எழுதக்கூடிய கரங்களிலிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
“நிழல்” கதை நிழல் உலகத்தின் துரோகத்தையும் அந்த வாழ்வியலின் போக்கையும் நமக்கு கண்முன் காட்டுகிறது. திரைக்கதையாக விரியும் சாத்தியம் உள்ள கதை.
“பிறைக்கொடிக் கப்பல்” கதை மாய எதார்த்தவாதத்தைத் தொட்டுச் செல்கிறது. செல்வி என்ற பெயர் இஸ்லாமிய சமூகத்தில் புழங்குபெயர்களாக வைக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமூட்டும் புதுத்தகவல்.
ரியாஸின் பக்கபலமாக நான் பார்ப்பது கீழ்காணும் விடயங்களைத்தான்.
- வாழ்வை புனைவுக்குள் லாவகமாக எவ்வித தொந்தரவோ உறுத்தலோ இன்றி உட்கார வைக்கும் தன்மை. அது தேர்ந்த எழுத்தாளர்களிடம் மட்டுமே பெரும்பாலும் பார்க்க முடிவது.
- கதைக்குள் நிகழ்த்தும் இவரின் தத்துவார்த்த மாயஜாலம்.
- முடிவு நிகழும் இடத்தில் வழங்கப்படும் வாசகருக்கான இடைவெளி.
- கச்சிதம்
பிறைக்கொடிக் கப்பல் நீட்டிய பச்சை மாலையை பத்திரமாக வைத்திருங்கள் ரியாஸ். எங்களுக்கு அவைதான் கடலின் ஆழத்திலிருந்தும் திக்கற்ற திசைகளிலிருந்தும் நற்கதைகளை உங்களின் மூலம் வழங்குகின்றன.