(நினைவலைகள்) அலை முழங்கிய கடல்

ஜான் சுந்தர்

விடியற்காலை ஆறரை மணிக்கெல்லாம் ஹாஜியார் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவீர்கள். குழந்தைகளைத் தூங்கவைப்பதொரு கலையென்றால் தூக்கத்திலிருந்து வலிக்காமல் பிரித்து எழவைப்பது வேறொரு வகை. விழி மூடிக்கிடக்கும் எங்கள் செவியுள்ளிறங்கி,

திருமறையின் அருள்மொழியில் விளைந்திருப்பது என்ன?

இறைத்தூதர் நபி பொன்மொழியில் குவிந்திருப்பது என்ன?

அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன?

என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கேட்க ராணியம்மாவோடு சேர்ந்து பதில் சொல்லும் முனைப்பில் நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலர எழுவோம். 

படுக்கையிலிருந்து நகைமுகமாய் எழுந்துகொள்ள உங்களைப் போன்றவர்களின் வரவுதான் மிகச்சரியான வழியாக இருக்க முடியுமென்று பக்கத்துவீட்டு லத்தீப்பின் உம்மாவும் கோயமுத்தூர் வானொலி நிலையக்காரர்களும் சேர்ந்து முடிவு செய்தது எங்கள் வரமானது. நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் ’பாமாலை’யில் வந்தாலும்  உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி ரட்சித்தவர்  நீங்களல்லவா ஷாஹென்ஷா?

கோலிக்குண்டு விளையாடும்போதோ, பம்பரம் சுற்றி தில்லான் எடுத்துவிட்டாலோ, தோற்றவன் உம்மென்றிருக்க லத்தீப்பு பெண்குரலுக்கு மாறி ’மவ்வுனம் ம்ஹீஹீஹீம் மவ்வுனம்’ என்பான். மௌனத்தை மவ்வுனம் என்று அவன் சொல்வதைப் பார்த்தால் அழகிதழகென்று சொல்லத்தோன்றும். அதைவிட அழகாய் சுரேஷ் மேண்டலின் இசையை ’டிடி டிடிடிடி டிடிடிங்’ என்று வாயில் வாசிக்க, அலீமக்கா வீட்டு வாசலில் பச்சையும் மஞ்சளும் ரத்தச்சிவப்புமாய் பழுத்த இலைகளைக் கொட்டும் பாதாணி மரத்திலிருந்து டெய்லரப்பா வீட்டு சீனிப்புளியாங்காய் மரத்தணுப்பு வரைக்கும் இளங்கோவின் பம்பரம் திருமறையின் அருள்மொழியோடு பயணமாகும்.

லத்தீப்பின் வாப்பா குப்பாயத்தை அவிழ்த்து வைத்துவிட்டு வலைப்பனியனும் பர்ஸ் வைத்த பெல்ட்டுமாக டெல்லி செட்டைக் குடைந்து சால்டெரிங்கெல்லாம் வைத்து ஒரே பாட்டை திரும்பத் திரும்ப ஓட்டினால், அன்று முழுக்க அந்தப் பாட்டையும் இசைத்துணுக்குகளையும் விளையாட்டினூடே செர்பியை சவைப்பது மாதிரி சவைப்பதுதான் லத்தீப்பின் வேலை. எதைப் பாடினாலும் சுரேஷ் வாயிலிருந்து ’மீஜிக்’ வரும். காற்றைக் கொப்பளித்து முன்வரிசைப்பற்களோடு மோதவிட்டால் மொராக்கோஸ், கப்பாஸ். உதடுகளையும் நாக்கையும் மடித்து விரித்தால் டேப் ரிதம், மூக்குவழியாக முனகினால் மோர்சிங் என்றவன் விளையாட்டாய் செய்து காட்டியதையெல்லாம் இப்போது தொலைக்காட்சியில் வெளிநாட்டு ராப் இசைக் கலைஞர்கள் கார்ட்லெஸ் மைக்கில் செய்ய வீடே ஆச்சரியப்படுகிறது.  நான் மெல்ல வெளியேறி சுரேஷுக்கு ’அந்த ஞானத்தை வழங்கிய மூலப்பொருள் என்ன?’வென்று யோசித்தால் வண்டி நாகூரில் நிற்கிறது. பின்புலத்தில் பச்சைக்கொடி பறக்க நீங்கள் கையசைக்கிறீர்கள்.

மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ’ஓடிவருகிறான் உதயசூரிய’னை  அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா? அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், டேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்களுள் உங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா?

கம்பீரந்தொனிகளைப் பற்றிப் பேச்செழுந்தால், ஆசானே! உங்கள் நாற்காலியைத் துடைத்து வைக்காமல் நகர்ந்துவிட முடிந்திருக்கிறதா? உச்சஸ்தாயியைத் தொடப்போகும் வழியில் சன்னமாகிக் கொண்டே போய் பெண்மையைத் தொட்டுக்கரைந்துவிடும் குரல்களுக்கு  நடுவில் அடிமரம் துவங்கி கொடிபறக்கிற வரையில் வண்ணங்குறையாத் தூணல்லவா உம்முடைய அசலான  ஆண்குரல்?

அருள்மழை பொழிவாய் ரஹ்மானே

ஆலமெல்லாம் படைத்தோனே

அண்ணல் நபியைத் தந்தோனே

1925இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரியம் பீவிக்கு மகனாக பிறந்திருக்கிறீர்கள் என்கிற சேதி என்னை பின்னோட்டத்தில் இழுத்துச்செல்லும் வேறெங்கோ. கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போகும்போது கூடவே வருகிற சௌகத்தும், ஷகீலும், கஃபூரும் கூப்பிட்டார்களென்று கோட்டைமேட்டுக்கு ’சஹரெ’ழுப்பப் போனேன். உங்கள் பாடல்கள் ஒன்றிரண்டு தெரியுமென்கிற தைரியந்தான். வருடந்தோறும் ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகளில் ப்ரியத்தை அரைத்தூற்றிய தால்சாவில் என்னை முழுக வைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு பாடல்களும்.

அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல் நபி வரும் போது

இன்னல் செய்தாள் ஒரு மாது’… பாடலின் சரணத்தில்,

தினமும் காத்திருப்பாளே தீயவள் மாடியின் மேலே

குண நபிநாதர் வருகின்ற போது குப்பையை கொட்டிடுவாளே…….. 

என்று உச்சாணிக் கொம்பேறி தொடுவானந்தொட்ட பின்னும் ‘கோமான் ரசூல் தலைமேலே’ என்கிற வரியில் கோமானுக்கு முன்னதாக உங்கள் காத்திரத்தொனி கலங்கரை விளக்கமென தடித்து மெலெழுகையில் உயிர் ஒரு நொடி காணாமலாகிறது. இஸ்லாத்தில் ஹராம் என்று தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் இசைதான் இஸ்லாத்தோடு எங்களை கைகுலுக்கச் செய்தது. கட்டியணைக்கவும் சொல்கிறது. ’இஸ்லாத்தினை நான் ஏற்றேன்’ என்றவர் கரம் பிடித்தழும் அவளோடு ஒரு கணம் சேர்ந்தழச் செய்வதும் அதுதான். நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக  எங்களைக் கட்டிவைத்திருக்கும் ரகசியமும் அதுவேதானா? அப்படியானால்  நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா? உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா?

கஸ்தூரி மணம் கமழும் தங்கள் மேனியை

இந்தக் கண்களாலே பருகுகின்ற ஆவல் தளும்புதே

புஷ்பங்களின் மகரந்தமாம் மதினப் புழுதியில்

புரள வேண்டும் உருளவேண்டும் போலிருக்குதே

கல்லில் செதுக்கியெடுத்த கனத்தோடும் கலையழகோடும் மிளிரும் இந்தப் பாடல்கள்  மலைவாழைப்பழங்கள் . வாயாரத் தின்பது போலல்லாது பாடிவிடமுடியுமா அதன் முழக்கத்தை? பதில் சொல் எங்கள் பாரதிதாசன் சங்கே

தலைவாரிப் பூச்சூடி உன்னை

பாடசாலைக்குப் போவென்று

சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய்- நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

பாடகருக்கான பாவனைகள் இல்லாத, கண்டிப்பான வாத்தியாரின் இறுக்கமான முகத்தோடு தோற்றமளிக்கும் நீங்கள் உண்மையில் ஒரு குழந்தை  மாதிரி என்று சத்தார் பாய் சொன்னதாகச் சொல்லக் கேட்டேன். தமிழ்தேசத்தின் ஊடகங்களில் செய்திவாசிப்போரும், உலக அளவில் செல்லக்குரல்களைத் தேடும் தொகுப்பா’ல’ர்க’லு’ம் குழந்தைகளுக்கு கதை ’சொள்’வோரும், திரையுலக பொயட்டுகளும், அவர்தம் கிண்ணாரக்காரர்களும், ’ஜிப்ரீஷ்’ நவீனக்கவிகளும் உங்களைக் கேட்டு டண்ணகரத்தையும், றன்னகரத்தையும், வல்லின றகரத்தையும் இடையின ரகரத்தையும் உச்சரிக்கக் கற்றுத் தேர்வார்களாக.

உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற  இறைவனுக்கு உண்மையானவர்

இந்த இரண்டு வரிகள் மட்டுமே மேற்சொன்ன  நான்கு எழுத்துகளின் உச்சரிப்பையும் கற்றுக்கொடுக்க வல்லவை. அந்தவகையில்  நிஜமாகவே கண்டிப்பான, அதேசமயம் இலகுவான தமிழ் வாத்தியாராக எக்காலத்துக்கும் நீங்கள் நிலைபெற்றிருப்பீர்கள். இந்தப் பாடலில் மேலும் ஒரு சிறப்பு இருப்பதாக நினைக்கிறேன். வந்தவர், தந்தவர், காவலர், நாயகர் இப்படி எல்லாவரிகளும் ரகர ஒற்றில் முடிகிறது. ரகர ஒற்றை அரை மாத்திரையில் உச்சரித்து முடித்துவிடவேண்டுமென்கிறது மொழி. நீண்டு பின் மெலிந்து அடங்கும் மெட்டுக்குள் அதை கடைபிடிப்பது எவ்வளவு சிரமம். ரசிகனுக்கு இப்படியொரு காட்டாற்றைக் கயிறு கட்டிக் கடந்தீர்கள் என்பது தெரியப்போவதே இல்லை. அவவளவு திறமையாக பற்சக்கரங்களுக்கு மசகு பூசிவிட்டிருக்கிறீர்கள். 

கோடிக் கோடி செல்வம் வந்த போதிலும்

கொண்ட கொள்கை மாறிடாமல் நின்றவர்

ஆடையின்றி பெண்களந்த நாளிலே

அலைந்திருந்த மடமை தீர்த்து வென்றவர்

ஈடில்லாத போதகர் நபிகள் நாயகர்

உருவமற்ற  இறைவனுக்கு உண்மையானவர்

(உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்)

ஜனாப்! இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்று முழங்கியிருக்கிறீர்கள். இந்த ஏப்ரலின் எட்டாம் ராத்திரியைக் கடக்கமுடியாத மனவுளைச்சலில் உருண்டு புரண்டு அரைகுறையாக தூங்கிய பின்னிரவின் கனவில் அவனிடம் இன்னொரு இசைமுரசை தரச்சொல்லிக் கையேந்தினால் கையை விரிக்கிறான்.

ilayanilajohnsundar@gmail.com