

பேருரு
பறவையெலாம்
விசும்பின் அணிகலன்.
பாறையெலாம்
போகப்போதின்
பூரித்த மாமுலை.
நாரையெலாம்
விண்ணை மண்ணில்
விரித்து வைக்கும்
வெண்கருணை.
ஒளியெலாம்
அன்பின் விந்து.
இருளெலாம்
சக்தியின் உறக்கம்.
துலக்கமெலாம்
தூய நற்செய்தி.
கரந்தவை
காலாதீதக் கல்வி.
நரையும் திரையும்
உயிர்ப்பறியா
உதிர்இலைகள்.
துயரெலாம்
இலை கழுவும்
மழைக்கரம்.
மகிழ்வெலாம்
மாநிலையின் மெய்ம்முகம்.
மேவும் மெய்ப்பாடுகள்
உள்ளத்து வினைகள்.
இசையெலாம்
இக்கணத்தின் எழுச்சியலை.
மௌனமெலாம்
நிறைவின் வளர்பிறை.
பேரண்டம்
பிறைக்கணங்களின் உயிர்த்திரள்.
நானெலாம்
நானெலாம்
நானிலத்தின் ஓருரு
மானுடத்தின் பேருயிர்.
- கார்த்திக் நேத்தா
ganeshmodec@gmail.com


