அவன் நோட்டுப்புத்தகத்தில் மட்டும் எத்தனை வகையான குரங்குமனிதர்கள், குகை சித்திரங்களை நெருப்பு வெளிச்சத்தில் காண்பது போல உணர்வு… நவீனின் ஆசிரியர், அதன் பக்கங்களைப் பக்கவாட்டில் தன் கட்டைவிரலால் தேய்த்து இழுத்துவிட்டார். தோல்பாவை கலைஞர்களின் திரைஓவியங்கள் போல் ஓடி நின்றது. இந்த மனிதக்குரங்கு சித்திரங்களுக்கும்.. நவீன் வயதிற்கும்.. எப்படி புரிந்துகொள்வது என்று அவருக்குக் குழப்பம். ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் துயரமாய் மனிதன்.. அவனுக்கு குரங்கின் தலை.. பெரிய கரும் தாடைகள், ரப்பர் போல் விரிந்த சிவப்பு உதடுகள், மஞ்சளும் கருப்புமாய் கருவிழி மணிகள்.. உடல் முழுதும் கரும்பாறைகளின் வர்ணம்.. ஆங்காங்கே செம்பட்டை ரோமங்கள்…