(நினைவலைகள்) உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல்

முனைவர் ஹாஜா கனி

உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் செம்புலப் பெயல் நீர் போல சீருறக் கலந்திட்ட இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்களின் கம்பீரப் பெருங்குரல் கலையாமல் காற்றாண்டு வரும் காலத்தில் அவர் நூற்றாண்டு தொடங்குகிறது.

திரையிசைப் பாடல்களின் செல்வாக்கை மிஞ்சிய இறையிசைப் பாடகராய் எழுச்சிமிகு இசைமுரசாய் தமிழ்கூறும் நல்லுலகத்தில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள அவரது வாழ்விலும் வழங்கிய பங்களிப்புகளிலும் வருங்காலத் தலைமுறைக்கு சிலிர்ப்பு தரும் செய்திகள் பலவுண்டு.

எனக்கு பாட்டன் முறையிலான அவருடன் தனிப்பட்ட முறையான நெகிழ்வுதரும் நினைவுகள் பலவுண்டு. தமிழுலகம் அறிந்திராத பல செய்திகளையும் அவரது மகனார் நு.ஆ.நௌக்ஷாத் மற்றும் நாசர் வாயிலாக அறிந்தவைகளும் உண்டு.

ஏப்ரல் 8 2015 அன்று மாலைப்பொழுதில் தகைசால் தமிழர் அன்புத்தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் சைதை சி.ஐ.டி. நகர் இல்லத்தில் உரையாடிக்கொண்டிருந்தோம். அன்றுதான் காயிதேமில்லத் கல்லூரி தனக்கு வழங்கிய விருதுத் தொகையை தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் காசோலை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று திரும்ப வழங்கினார். அந்தச் சந்திப்பு முடிந்து இல்லம் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் அப்போதைய ராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு. “இசைமுரசு நாகூர் ஹனீஃபா இறந்துவிட்டதாகத் தகவல்” என்றார்.

நான் அதிரவில்லை. இதுபோல் பலமுறை அவரைக் குறித்து வதந்தி பரவியதுண்டு. இதுவும் அது போன்ற வதந்திச்செய்தியாகவே இருக்க வேண்டும் என்று கருதி ‘உலகிலேயே அதிகமுறை இறந்தது இசைமுரசு நாகூர் ஹனீபாதான். அடிக்கடி இப்படி செய்தி வருவதுண்டு’ என்றேன். எதற்கும் ஒருமுறை பார்த்துவிடுவோம் என்று சென்னை கோட்டூர்புரத்தில் அவர் வாழ்ந்து வந்த அவரது மூத்தமகன் நௌக்ஷாத் இல்லத்திற்கு விரைந்தேன்.

இறப்புச் செய்தி உண்மையாகி இதயம் சுட்டது. வழக்கமாக இசைமுரசு இருக்கும் அறையிலிருந்து அவரது உடலை கூடத்திற்குக் கொண்டுவந்தோம். அவரது மகன் நௌக்ஷத் பேரன் அக்ஷ்ரஃப் இவர்களோடு எஸ்.டி. கொரியர் தலைவர் டாக்டர் கே.அன்சாரியின் மச்சான் செய்யதுகனியும் உடனிருந்தனர். சில மணித்துளிகளில் இப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மிகுந்த துயரத்தோடும் பரபரப்போடும் அங்கு வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் இசைமுரசின் பால்ய நண்பர் முத்தமிழறிஞர் கலைஞரும் அவர் மகள் கனிமொழி கருணாநிதி எம்.பி. மற்றும் தி.மு.க. முன்னணித் தலைவர்கள் வீட்டில் குழுமினர். கவலை தேய்ந்த கரகரத்தத் குரலில் கலைஞர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

நினைவு நாடாக்கள் பழைய காலங்கள் நோக்கிச் சுழன்றன. என் மழலை நாட்களில் இசைமுரசு ஹஜ் பயணம் செல்லும் தருணம் என நினைவு என் பாட்டனாரைப் பார்க்க இல்லம் வந்திருந்தார். அது ஒரு தேர்தல் காலம். நாகூரில் மறைந்த என் மச்சான் சாஹா ஹாஜா சுல்தான் கபீர் உடன் தெருவில் சிறுவனாக நடந்து சென்று கொண்டிருந்த போது மச்சான் சாஹாவிடம் வீட்டில் அனைவரிடமும் நான் சொன்னதாகச் சொல்லி உதயசூரியனுக்கு ஓட்டுப் போடச் சொல்லவேண்டும் என்றார். என் பெரிய வாப்பா மு.அப்துல்லா மூலமாக எம்.ஜி.ஆர் வெறியில் ஊறிப் போயிருந்த சிறுவனான நான் ஏதோ எதிர்த்துப் பேசிவிட இவனை சாக்குமூட்டையில் கட்டுங்கள் என்றார். எடுத்தேன் ஓட்டம்.

மறுநாள் மாலையில் நாகூரில் நடந்த கச்சேரியில் தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரி அவர்களை ஆதரித்து அவர் நடத்திய கச்சேரியையும் குறிப்பாக கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் நம் நாட்டைக் காக்க ஓட்டுப்போடுங்கள் என்று 

பேரன்பு கொண்டோரே, பெரியோரே, தாய்மாரே, 

அன்புடனே பண்புடனே ஆதரவு தாருங்கள், 

உதயசூரியன் சின்னம் அது வெற்றிப்பெறுவது திண்ணம்

என்ற பாடலை மிகவும் ரசித்துக் கேட்டேன்.

தமிழ்நாட்டு முஸ்லிம்களின் இன்ப துன்பங்களோடு இரண்டறக் கலந்திட்ட இசைமுரசின் வாழ்க்கைப் பயணத்தைத் தமிழ்ச் சான்றோர்கள் வாயிலாகவும் அவரது நண்பர்கள் வாயிலாகவும் அவரது மகன்கள் நௌக்ஷத் மற்றும் நாசர் மூலமாகவும் மெல்ல மெல்ல அறிந்தபொழுது பாட்டன்முறை என்ற உரிமையோடு சற்றுத் துடுக்குத்தனமாக அவரை அணுகும் முறை மறந்து அளப்பரிய மதிப்பும் அன்பும் அவர் மீது ஏற்பட்டது.

நாகூரில் பள்ளி மாணவனாக இருக்கும்; போதே பாடுவதில் தனித்த முத்திரை பதித்த இசைமுரசுவின் புகழ் தந்தை பெரியாரின் கவனம் வரை சென்றுள்ளது. தந்தை பெரியார் நாகைப் பகுதிக்கு வரும்போது சிறுவனாக இருந்த இசைமுரசை அழைத்து ‘என்னோடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாட இயலுமா ஐயா?’ என தந்தை பெரியார் கேட்க, ‘அதைவிட வேறு என்ன வேலை ஐயா?’ எனக் கிளம்பி விடுவாராம். அவசியச் செலவின்றி வேறேந்த செலவும் செய்திடாத தந்தை பெரியார் அக்காலத்திலேயே நாகூர் ஹனீஃபா அவர்களுக்கு இரண்டணா கொடுத்து ஊக்கம் படுத்துவதை இசைமுரசு பெருமையாகச் சொல்வார்.

திருவாரூரில் திருப்புமுனை

திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞரோடு இசைமுரசுக்குப் பால்ய வயதில் பூத்திட்ட நட்பு, பொழுதுபோக்கிற்கான ஒட்டாக இல்லாமல் சமூகத்தின் பழுதுபோக்கத் தம்மைப் பட்டை தீட்டிக்கொள்ளும் பயன்மிகு நட்பாக வடிவெடுத்து வலுப்பெற்றது. திருவாரூரின் ஓடம்போக்கி ஆற்று மணல் வெளியில் இசைமுரசு நாகூர் ஹனீஃபா தனது காந்தக் குரலில் கணீரென்று பாடி கூட்டத்தைச் சேர்த்திட அதன் பிறகு கலைஞர் உரையாற்ற கருத்தியலைப் பரப்பிய கவின்மிகு காலமாக அக்காலம் அமைந்தது.

ஈ.எம்.அபுபக்கர் ராவுத்தர்தான் அக்காலத்தில் பிரிட்டீக்ஷாரிடம் காகித வணிகத்திற்கான உரிமம் பெற்றிருந்தார். அவர் வழங்கிய காகிதம்தான் முரசொலி இதழாய் முகிழ்த்தது. கருணை ஜமாலின் கருணாநிதி அச்சகத்தில் அச்சுப்பிரதியாய் துளிர்த்தது.

இஸ்லாமியக் கருத்தியலை இசைப்பாடல்களால் காற்றில் விதைத்த தனித்துவப்பாடகரான நாகூர் ஹனீஃபா திராவிட இயக்கம் மெல்ல முளைத்து மேலேழுந்த காலங்களில் தனது கம்பீரமக் குரலாலும் களப்பணியாலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, முத்தமிழறிஞர் கலைஞர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தலைவர்களெல்லாம் வியக்கும் வகையில் பங்களிப்புச் செய்தார்.

எனவே திராவிட இயக்கத்தின் வரலாறு இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் வரலாற்றோடு பின்ணிப் பிணைந்தது. நீதிக்கட்சித் தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டுக்கு புறப்பட்ட போது நாகூரில் அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்று முன் வரிசையில் வாழத்துப் பாடல் பாடி வழியனுப்பி வைத்தவர் இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள். அவர் சென்ற விமானம் விபத்துள்ளாகி ஓமன் கடலில் விழுந்து அவர் மறைந்த போது தமிழ்நாடு கண்ணீரில் மூழ்கியது. அவர் மறைவை தாங்க முடியாமல் தந்தை பெரியார் எழுதிய இரங்கலும் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடலும் மிகவும் பிரசித்திப்பெற்றது. சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை வாழ்த்துப்பா பாடி வழியனுப்பி வைத்த நாகூர் ஹனீஃபாதான் அவருக்கு இரங்கல் பாடலும் பாட நேர்ந்தது.

அஞ்சாநெஞ்சான் என்று போற்றப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள்தான் புதுக்கோட்டையில் வைத்து அறிஞர் அண்ணாவுக்கு நாகூர் ஹனீஃபாவை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘கருப்பன் நல்லா பாடுவான்; பயன்படுத்துங்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் அண்ணாவிடம் அழகிரியார் இசைமுரசை அறிமுகம் செய்தாலும் அண்ணா இசைமுரசை தனது இதயத்தில் ஏந்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்திலே முட்டைக்கரு 

திராவிட இயக்கம் எதிர்ப்பெனும் பேரலையில் எதிர்நீச்சல் போட்டு வந்த காலம் அது. நாகூர் ஹனீஃபா மேடையில் இயக்கப் பாடல்களை எழுச்சியோடு பாடும்போது எதிரணியினர் முட்டைகளை முகத்தில் வீசி தாக்குக்கின்றனர். நாகூர் ஹனீஃபாவின் நெற்றியில் மோதி உடைந்த முட்டையின் கரு முகத்தில் வழிந்த போதும் கருத்தியல் பாடலை நிறுத்தாமல் பாடிக்கொண்டிருந்தார். துடிதுடித்துப் போன அண்ணா துணுக்குற்று ஓடி வந்து தனது தோளில் இருந்த துண்டால் நாகூர் ஹனீபாவின் முகத்தில் வழிந்த முட்டைக்கருவைத் துடைத்துவிட்டுள்ளார்.

‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடலை ஒருமேடையில் படித்துப்பார்த்து மிகவும் ரசித்து கலைஞர் அதைப் பாடுமாறு இசைமுரசிடம் கொடுத்துள்ளார். உடனே ஈர்ப்புக்குரிய மெட்டில் மேடையிலேயே அப்பாடலை இசைமுரசு பாடி வியக்கவைக்க, நெகிழ்ந்து போன அண்ணா இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றால் தி.மு.க.வுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்குமே என்று ஆசைப்பட்டுள்ளார். அண்ணாவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அப்பாடல் அம்மையப்பன் என்ற படத்தில் சேர்க்கப்பட்டது. இன்று போலவே அன்றும் ஒன்றிய அரசுடன் தி.மு.க ஒன்றாமல் தன்மானப் போராட்டத்தின் விளைவோ என்னவோ தணிக்கை அதிகாரிகள் அப்பாடலை படத்திலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் வெகுண்டெழுந்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா தன்னை ஒப்பந்தம் செய்திருந்த மிகப்பெரிய இசைத்தட்டு நிறுவனத்திற்குச் சென்று ‘அழைக்கின்றார். அழைக்கின்றார் அண்ணா’ பாடலை ஒலிப்பதிவு செய்யக்கோரியுள்ளார். திரைப்படத்திலிருந்து தணிக்கைத் துறையில் இப்பாடல் நீக்கப்பட்டதற்குக் காரணம் அன்றைய சர்வ வலிமை பொருந்திய ஒன்றிய அரசுக்கு எதிரானதாக கருத்துகளே என்னும் நிலையில் அதை எப்படி பதிவு செய்வது என்று நிறுவனம் தயங்கியுள்ளது. இப்பாடலை உங்களால் பதிவு செய்து வெளியிட முடியாதென்றால் இனி எனது எந்தப் பாடலையும் வெளியிடக்கூடாது என்று வெகுண்டெழுந்து ஒரு வெடிகுண்டை வீசியுள்ளார். அதிர்ந்து போன நிறுவனம் அண்ணா பாடலை ஒலிப்பதிவு செய்து வெளியிட சம்மதித்துள்ளது. அதை இசைமுரசு ஆனந்தப்பெருக்கோடு தொலைப்பேசி வாயிலாக அண்ணாவிடம் சொன்னபோது அவரே நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்டுள்ளார். அந்த ஆண்டில் இசைதட்டுகளில் இசைமுரசு நாகூர் ஹனீபா பாடிய ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ பாடல்தான் அதிக விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அறிஞர் அண்ணா இல்லத்திற்கு இசைமுரசு ஹனீபா தன் இசைக்குழுவினருடன் விருந்துக்குச் சென்றது பிரபலமான ஒரு நிகழ்வு. இசைக்குழுவினர் பீடி, மூக்குப்பொடி ஆகிய பழக்கங்களை உடையவர்கள் என்றாலும் இசைமுரசின் முன்பு அவற்றைத் துய்ப்பதற்கு அஞ்சுபவர்கள். இதைப் புரிந்துகொண்ட அறிஞர் அண்ணா விருந்துக்குப் பிறகு இசைக் குழுவினருக்குத் தேவையானவற்றை ரகசியமாக வாங்கிக் கொடுத்து உபசரித்தது அண்ணாவின் பேரன்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

நாகூர் கடைத் தெருவில் தான் முதன்முதலில் கட்டிய வீட்டுக்கு அண்ணா இல்லம் என்று பெயர் சூட்டினார் இசைமுரசு. பிறகு நூர் சாஅதி தைக்காத் தெருவில் கட்டிய பசுமை சூழ்ந்த இல்லத்துக்கு கலைஞர் இல்லம் என்று பெயர் சூட்டினார். சென்னை கோட்டுர்புற இல்லத்திற்கு காயிதேமில்லத் இல்லம் என்று பெயர் சூட்டினார்.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறிய மேடையில் பாடிய பெருமை இசை முரசுவிற்கு உண்டு. திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. உருவான பின், தான் வாழும் காலம் வரை தி.மு.க.வின் அனைத்து மாநாட்டு மேடைகளிலும் அவர் பாடல் ஒலித்து வந்துள்ளது. கண்ணியமிகு காயிதேமில்லத்துக்கும் தி.மு.க.விற்கும் உறவை வலுப்படுத்தியதில் இசைமுரசுக்கு பெரும் பங்குண்டு. மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே என்ற கண்ணியமிகு காயிதேமில்லத்தின் மனம் கவர்ந்த பாடலை அவர் அடிக்கடி பாடச் சொல்லி கேட்பதுண்டு.

ஒருமுறை, தொடர்ச்சியாக பாடல்களைப் பாடிவந்த, இசை முரசுக்குத் தொண்டை புண் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்து மூர்ச்சையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்கத்திலிருந்த காயிதேமில்லத் பதறிப்போய் இரவு வெகுநேரம் வரை இசைமுரசு கண் விழிக்கும் வரை ஊன் உறக்கம் இன்றி பதைபதைப்போடு விழித்திருந்த நிகழ்வும் வரலாற்றில் உண்டு.

த.மு.மு.க. தலைவர்கள் நாண நனையம் செய்தமை

11-1-2004 அன்று திருவாரூரில் எனது திருமணம் நடைபெற்றது. அடியேனும் பேரன்முறை,  துணைவி ஆயிஷா சித்திக்காவும் அவரது அன்புக்குரிய ஒன்றுபட்ட சகோதரி ரஹ்மாவின் பேத்தி. திருவாரூரில் தனது பால்ய நண்பர்கள் யாரையெல்லாம் திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்று முன்னதாகவே பட்டியல் தந்திருந்தார். கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தலைவர் ஆசிரியர் ச.மு.யூசுப், தி.மு.க. பிரமுகர் ஆர்.பிஎஸ் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கோர். நபிவழித் திருமணம் என்பதால் உள்ளூர் ஜமாஅத்தின் எதிர்ப்போடு அத்திருமணம் நடைபெற்றது. முன்னதாகவே திருமணத்திற்கு வந்திருந்த இசைமுரசு மணமக்கள் பெயரில் எழுதி வந்த பாடலை கம்பீரமாகப் பாடினார்.

மணவிழாவைத் தொகுத்து வழங்கிய (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தமீமுன் அன்சாரி இம்மேடையில் இசைமுரசு பாடமாட்டார்; வாழ்த்திப் பேசுவார் என்றெல்லாம் கட்டையைப் போட்டாலும் எட்டுக்கட்டையைத் தாண்டிப் பாடும் இசைமுரசை அந்த முட்டுக்கட்டைத் தடுக்கவில்லை. நீங்களெல்லாம் பேச்சாளர்கள், நான் மட்டும்தான் பாடகன். எனவே பாடுகிறேன் என்று பாடினார். தலைமையேற்று வாழ்த்துரை நிகழ்த்திய தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அன்று இசைமுரசை சற்று செல்லமாக வறுத்தெடுத்துவிட்டார். இசைமுரசு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் எதிர் கருத்தால் சினம் கொள்ளவில்லை. சிந்தித்தார்.

தி.மு.க. உடன்பிறப்புகளுக்குக் கொஞ்சம் கோபம் இருந்தது. இருந்தாகத்தானே வேண்டும். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழகம், புதுவை என 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி பெருவெற்றி பெற்றது. கூட்டணித் தலைவர்கள் கலைஞருக்கு வாழ்த்துச் சொல்ல பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் அறிவாலயம் சென்றிருந்தபோது கட்டற்ற காட்டாறு போல கலைஞரின் தனியறைக்குள் புகுந்த இசைமுரசு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வையும் த.மு.மு.க. தலைவர்களையும் உள்ளே அழைக்கச் சொல்லி கலைஞரின் அருகிலே பேராசிரியர் ஜவாஹிருல்லாவை நிறுத்தி கன்னத்தை தடவிக் கொடுத்து, “இவர்களெல்லாம் நம்முடன் இருந்ததால்தான் நாம் நாற்பது இடங்களிலும் வென்றோம்” என்று பெருமிதமாகக் கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 6. தமிழ்நாட்டை உருக்குலைத்த சுனாமி என்ற ஆழிப் பேரலை தாக்குதலின்போது பெரும் பாதிப்புக்குள்ளான நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர ஊர்களில் மீட்புப் பணி செய்ய பல மாவட்டங்களிலிருந்தும் வந்திறங்கிய த.மு.மு.க. தொண்டர்களை நாகூரிலுள்ள தனக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் இலவசமாகவே சில மாதங்கள் தங்கவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைமுரசின் இணைபிரியாத் தோழனாக திகழ்ந்த வழக்கறிஞர் நீடூர் ஏ.எம்.சயீத் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் இசைமுரசின் இருக்கையிலிருந்து ஓரிரு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் செவிப்புலன் குன்றியிருந்ததால் சற்று சத்தமாகவே என் பேரன் ஹாஜா கனியை நன்றாக பார்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்டதை தற்போதைய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சகோதரர் ப.அப்துல் சமத் நெகிழ்வோடு தெரிவித்தார்.

தி,மு.க.வரலாற்றில் திருப்புமுனை அமைத்த ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலை இசைமுரசு பாடியதன் மூலம் அப்போராட்டத்தின் களத்தளபதி கலைஞர் என்பதைப் பதிவு செய்ததோடு இசைமுரசுவும் அப்போராட்டத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.விலுள்ள முன்னணி தலைவர்களுக்கு கைதாகும் தடை மீறிய போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க தி.மு.க. தலைமையே விலக்கு அளித்திருந்தபோதும், அந்த விதிகளையெல்லாம் புறந்தள்ளி “நான் முதலில் கட்சிக்காரன், பிறகுதான் கச்சேரிக்காரன்” என்று பல்வேறு தடைமீறிய  போராட்டங்களில் பங்கேற்று சிறைபுகுந்தவர் இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள் மட்டுமே.

முரசொலி மாறன் அவர்கள் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது அவரை சந்திக்கச் சென்ற இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நாகூர் ஹனீபா பாடிய ‘ஓடி வருகிறான் உதய சூரியன்’ பாடலைக் கேட்கவேண்டும் போல் உள்ளது’ என்று கூற, உடனே சென்னையிலிருந்து இசைத்தட்டு அனுப்பி வைக்கப்பட்டது என்ற செய்தியை தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எழுதியிருந்தது.

இசைமுரசு நாகூர் ஹனீபாவிற்கு புலவர் ஆபிதீன், சமுதாயக் கவிஞர் தா.காசிம், இறையருட் கவிமணி கா.அப்துல்கபூர், மதிதாசன் (அப்துர் ரஹீம்) சாரண பாஸ்கரன், நாகூர் சலீம், நாகூர் சாதிக், நாகூர் சேக் தாவூத், அபிவை தாஜ்தீன், கிளியனூர் அப்துல் சலாம், திருவை அப்துர் ரஹ்மான், வீரை அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு கவிஞர்கள் பாடல்களை எழுதியுள்ளனர். இசைமுரசுவின் குரலால் இவர்களின் கவிதைகள் இன்றும் வாழ்கின்றன.

’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்; என்ற பாடலை இசைமுரசு பாடியபோது அதை இயற்றிய பாவேந்தர் பாரதிதாசன் என் கவிதைக்கு நீ உயிர் கொடுத்தாய் என்று பாராட்டினாராம். உடுமலை நாராயண கவியின் ‘’கன்னித்தமிழ்ச் சாலையோரம்’ பாடலை இசைமுரசு மிக இனிமையாக பாடியிருப்பார்.

இசைத்தமிழாலும் இயக்கப்பணியாலும் இணையில்லாச் சாதனைகள் பல நிகழ்த்திய இசைமுரசு நாகூர் ஹனீபா மார்க்கப் பற்றோடு திகழ்ந்தார். தனது மார்க்கக் கடமைகளை ஒரு சிலரைப் போல மறைத்துக்கொள்ளவில்லை. அப்படியெல்லாம் மறைத்துக்கொள்பவர்களை விடவும் பல்லாயிரம் மடங்கு புகழுடன் இசைமுரசு திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

90 வயதிலும் தவறாமல் நோன்பு நோற்றார். தொழுகையில் மிகப் பற்றோடு இருந்தார். மிகச் சிறந்த கலைஞராக திகழும் ஒருவரிடம் எல்லா பரிமாணங்களிலும் நாம் முழுமை கண்டுவிடமுடியாது.

இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்கு இறைவன் அந்த முழுமையை அருளியிருந்தான். உள்ளங்களை வென்ற ஓரிறைக் குரலாய் காற்று வெளியெங்கும் அவரின் காந்தக் குரல் மனித நேயத்தை ஏந்தி வாழ்து வருகிறது.