ஒரு தனிப்பட்ட மனிதனின் கனவாகவும் தேடலாகவும் விண்வெளிப்பயணம் இருந்து கொண்டிருந்த காலகட்டங்களில் பல நாடுகள் அதே கனவைக் காண்பதும் நிறைவேற்றுவதற்குமான பணிகளில் விரைந்திருந்தன. வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மனித இனம் எல்லையற்ற விண்வெளியையும் பரந்து விரிந்து கிடக்கின்ற பிரபஞ்சத்தையும், இன்னும் எண்ணற்ற வேறுகிரகங்களையும் தன்வசப்படுத்தி ஆள எண்ணம் கொண்டது.
இருபதாம் நூற்றாண்டில் மிக மோசமான இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து எல்லைகளை விரிவுபடுத்தும் போட்டியிலும் பேராசையிலும் போராடித் தளர்ந்துபோன காலகட்டத்தில், நிலத்துக்காக அடித்துக்கொண்ட நாடுகள் தனது எல்லைக் கோடுகளை நிலத்தோடுநிறுத்திவிடாமல் கடலிலும் கோடு கிழித்து எல்லைகளை நிர்ணயம் செய்தனர். இதில் பிராந்திய கடல் பகுதி, சர்வதேச கடல் பகுதி என்று இரண்டு வகைகளில் பிரிப்பார்கள்.