அவர் எழுத்தாளர் கழகத்தின் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்டிருந்தார். அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் நிர்வாகக் குழுவிலும் எழுத்தாளர் கழகத்திலும் மட்டுமே அவர் சேவையாற்றினார். இடையில் சில ஆண்டுகள் தம்பனிஸ் கிழக்கு சமூக மன்ற நற்பணிக் குழுவில் இணைந்து பணியாற்றினார். ஒருசிலரைப் போல் தனக்குப் பெயர்வர வேண்டும் என்று அவர் என்றைக்கும் நினைத்ததில்லை. வேறுசில அமைப்புகள் அவரை அழைத்தும் அவர் செல்லவில்லை. இறுதிவரை எழுத்தாளர் கழகம்தான் என்று இருந்துவிட்டார்.