தட்டுமுட்டுப் பொருட்கள், பழைய துணிமணிகள் முதலியவற்றை அப்புறப்படுத்துவதற்கு சாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ள ‘சல்வேஷன் ஆர்மி’க்குச் செல்வது வழக்கம். அங்குச் செல்லும்போது, ‘ஜாலான் மயானம்’ என்னும் சாலையைப் பார்ப்பதுண்டு. அப்பர் சாங்கி ரோடு நார்த்திலிருந்து பிரிந்து செல்லும் சிறு சாலைதான் ‘ஜாலான் மயானம்’. ஆனால் அதன் வரலாறு என்ன? ஏன் அந்தச் சாலைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது? என்பதைப் பற்றி எல்லாம் சிந்தித்தது இல்லை.
அண்மையில் அங்கு சென்றபோது, அந்தச் சாலையின் சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை அகத்திலுள் வேரூன்றியது. தமிழில் சாலையின் பெயர் இடம்பெற்றிருந்ததே அதற்கு முக்கியக் காரணம். சிங்கப்பூரில் ஒருசில சாலைகள் மட்டுமே தமிழில் உள்ளன அல்லது தமிழர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்களின் பூர்வீக ஊர்களைக் குறிக்கும் சாலைகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளன.