கதைகளாகச் சொல்லப்பட்டிருப்பதாகச் சொன்னாலும் கதைகள் அல்ல… மனிதர்கள் எதிர்ப்படும் வேளைகளில் எல்லாம் ஏற்படும் அதிர்வலைகள், நிறைய மனிதர்கள் எதிர்ப்படுவதால் நிறைய அதிர்வுகளும் நிறைய எழுத்துக்களுமாக நிறைந்திருக்கின்றன இந்தக் கதைகள். இப்படியான அகவியல் புனைவுகளின் பாத்திரங்களில் பலரும் மனதில் வாழ்பவர்கள் (Intraverts) ஆகவே தரிசனம் தருகிறார்கள்.
சிறுகதைக்கென்று சொல்லப்படும் சம்பவங்களின் நிகழ்வுகள், பாத்திர முரண்கள், முதலும் முடிவுமான பின்னல்கள் என்று சிறுகதை எழுத்தின் முகங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, மனிதர்களையும் அவர்களின் மன ஓட்டங்களையும் ஒவ்வொரு மனிதனின் அறிமுகத்தின் போதான அவனது பின்னணிக் கதைகளும் என்று வேறு வேறு தளங்களில் இயங்கும் கதைகள்.