அவர் உள்ளூரிலும் தமிழ்கூறும் நல்லுலகிலும் நன்கறியப்பட்ட சிங்கப்பூர்த் தமிழர். சிலர் சிறு செயல் செய்தாலும் அதனை ஊதிப் பெரிதாக்கி ஊரில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். சிலர் பெருஞ்சாதனைகள் செய்தாலும் அதனை வெளியில் சொல்லக் கூச்சப்பட்டு நிறைகுடம் நீர் தளும்பாது என்பதுபோல் அமைதியாக இருப்பார்கள். பா.கேசவன் இரண்டாவது வகை மனிதர். அவர் தன்னை முன்னிறுத்திப் பேசுவது மிகவும் குறைவு.
தமிழ்நாட்டுக்குச் சென்றார். அங்கு ‘எஸ் எஸ் எல் சி’ கல்வி கற்று ஆசிரியர் பயிற்சியும் முடித்துச் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தார்.[1] பயிற்சி பெற்ற ஆசிரியராகச் சிங்கப்பூர்த் திரும்பி ஆசிரியர் தொழிலை மேற்கொண்டார். சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அவரிடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப் பாடம் கேட்டுப் பயனடைந்துள்ளனர். அவர்களுள் இந்நாளில் சிங்கைத் தமிழர்களின் முன்னணி அடையாளமாக விளங்கும் திரு அருண்மகிழ்நன், முனைவர் அ வீரமணி போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
சிங்கப்பூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் புலமை பெற்றோரில் கேசவனும் ஒருவர். அவர் தமிழ்மீது கொண்ட தீராத பற்றால் கேசவன் என்றால் தமிழ்! தமிழ் என்றால் கேசவன் என்று மதிக்கப்படுவர். இது மிகைப்படக் கூறுவதன்று! உண்மை என்பதை அவரையறிந்த அனைவரும் ஒப்புக் கொள்வர். அவர் ஏற்றமிகு பல பொறுப்புகளை ஏற்று நடத்தியவர்.