பாரதி (Subramania Bharati, 1882-1921) நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய நூலக வாரியமும், சிங்கப்பூர்த் தமிழ் பண்பாட்டு மையமும் இணைந்து, மகாகவி பாரதி மற்றும் அவரது காலத்தவரான சீனக்கவி
லூ ஷுன் (Lu Hsun, 1881-1936) இருவரின் சிந்தனைகளையும் குறித்து உரையாடும் ஓர் அரிதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சித்துராஜ் பொன்ராஜ், பேராசிரியர் ச்சுவா ஸு போங் (Chua Soo Pong) இருவரும் உரையாற்றிய இந்நிகழ்ச்சியில், பாரதி – லூ ஷுன் இருவரின் பங்களிப்புகளும் ஆய்வுசெய்யப்பட்டு அவர்களுக்குள் இருக்கும் பல ஒற்றுமைகள் வெளிப்படுத்தப்பட்டன. உரையாடலின் முடிவில், ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ பாடலை சீனத்திற்கு மொழிபெயர்த்து பேராசிரியர் ச்சுவா உச்சஸ்தாயியில் பாடியபோது எழுந்த மனவெழுச்சி அலாதியானது.
பாரதியை சீனத்திற்குக் கொண்டுசெல்ல ஆவன செய்வதாகப் பேராசிரியர் சுவா தெரிவித்த செய்தி மகிழ்ச்சிக்குரியது. அம்முயற்சிக்கு நன்றி பாராட்டும் விதமாக சீனக்கவி லூ ஷுன் கவிதைத் தெறிப்புகள் இரண்டை இணைத்து மரபு, புது, நவீன வடிவங்களில் நான்கு கவிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி இங்கே.