கவிதை

ராஜு ரமேஷ்

சிறுகோட்டுப் பெரும்பழம்

சிறுமலரைப் பறிப்பதென எண்ணியே துவங்கியது
கிழக்கின் ஆரஞ்சுப் பழத்தைப் பறித்துவிடும் பேராசை
வானேகும் மலையின் சாய்மானத்தில்
முட்டி வலிக்க வலிக்க ஏறத்தான் வேண்டியிருக்கிறது

மெத்தென்ற புற்பாதமோ
நிழல் ஆசியோ
சுனைக் கருணையோ
எதையும் நுகரவிடாமல்
இழுத்தோடும் மழைப்பெருக்கென
புரவியை முடுக்குகிறது காலம்
கணிக்கவியலா காற்றின் திசையில்

உருமாறிய மலர் உருப்பெருங்கனியாய் கனக்க
உயிர்க்காம்பை இறுக்கி முகட்டில் நிமிர்ந்தால்
அந்திமக் கடலில் பழுத்து வீழ்கிறது
வாழ்வின் ஆரஞ்சு.

ஒன்றுமில்லாமல் போவதுதானே

இதுவரை ஏறிக்கொண்டிருப்பதாய் நினைத்தது
இறக்கமெனச் சரிகிறது
வளைந்து நெளிந்து தென்படுகிறது
வந்த நேர்பாதை
சரிவு அப்படியில்லை
சரேலென விரிகிறது
இனியொன்றும் செய்வதற்கில்லை
மிதிக்கும் கால்களை விடுவித்துவிடலாம்
குதித்துக் குதித்து
உருண்டிறங்கும் காலத்திற்குத்தான்
அப்படியொரு துள்ளல்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதும்
இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை
எப்படியும் ஒன்றுமில்லாமல் போவதுதானே