திருமேனி – அ.பிரபா தேவி

0
540

(கவிதை) திருமேனி

பிரபாதேவி

மாட்டுவண்டியில் அடுக்கிவைத்திருக்கும்

நெல்மூட்டைகளின்மேலே

கயிற்றை இழுத்துப்பிடித்துக்

கட்ட முற்படுகையில்

ஒற்றைக்காலை மடக்கித்தூக்கி

நிற்கிறான் அவன்.

இப்படித்தான் இருந்திருப்பான்

மருதநிலத்துத் தலைவன்

தமிழ்நிலத்து இந்திரன்.

நிலந்தொட்டு வாழ்பவனுக்கு

நெஞ்சுரங்கொண்டு நிமிர்பவனுக்குக்

காலடியில் அடங்கிடாதா உலகம் !

பொலிவுற்ற நெல்மணிகளாய்

திரட்சியாய்ச் செழித்து

 விளைந்திருக்கிறது

காதல்.

கதிரறுத்துக் கதிரடித்து

மூட்டைகளில் அடைத்துக்கட்டி

வாகாய் அடுக்கிவைத்து

இருபுறமும் கயிற்றைமுறுக்கி

இழுத்துக்கட்டிட மூட்டைமேல்

ஒற்றைக்காலூன்றித்

திமிர்ந்தெழுந்து நிற்கிறது

காமம். 

செழித்திருக்கும் காதல்மேல்

 தவமியற்றுகையில்தான்

மும்மேனி விளைச்சல்

காண்கிறது காமம்.